ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

கடையநல்லூரில் மட்டும் டெங்கு ஒழிப்பதில் சிரமம் ஏன் ?

கடையநல்லூரில் மட்டும் டெங்கு ஒழிப்பதில் சிரமம் ஏன் ?



ஒவ்வொரு வருடமும் மர்ம காய்ச்சல் ,விஷ காய்ச்சல் ,சிக்கன் குனியா காய்ச்சல் ,இன்னும் பெயர் தெரியாத காய்ச்சல்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் பரவினாலும் –முதலில் கண்டு பிடித்து ஆரம்பித்து வைப்பது மற்றும் கடுமையாக பாதிப்பது என்னவோ தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்ற எமது ஊரே...

கடையநல்லூரில் சில  உயிர்களை ஒரு சில வருடங்களாக கொள்ளை கொண்ட டெங்கு  .சிக்கன் குனியா போன்ற விஷ காய்ச்சல் -இப்போது கூட இந்த 2016 பிப்ரவரி மாதத்தில் முகமது தமீம் என்ற கல்லூரி மாணவன் இறந்த செய்தி மனதை மிகவும் பாதிக்கவும் செய்கிறது ..

நல்ல சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய இந்த வைரஸை பரவ வைக்ககூடிய ஏடிஸ் கொசுவை நமது கடையநல்லூரில் ஒழிப்பது சிரமம் ஏன்?

எனக்கு தெரிந்த காரணங்கள் ..
  •  நல்ல தண்ணீர் ஓரிரு நாட்கள் இடைவேளையில் விடப்படுகிறது ..இங்குள்ள மக்கள் நாட்கணக்கில் ( குறைந்தது இரு நாட்கள் முதல் அதிக பட்சம் பத்து நாட்கள் வரை ) சிறிய மற்றும் பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்கிறார்கள் .அவர்களது தொட்டிகளிலும் சேமித்து வைக்கிறார்கள் . இந்த அண்டா குண்டாக்களை ஒழுங்காக மூடுவதும் இல்லை ...அவர்களது தண்ணீர் தொட்டியை ஒழுங்காக கழுவதும் இல்லை  ..
  • கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வரும் சுகாதார துறை மருத்துவர்கள் ,சுகாதார ஆய்வாளர்கள் ,மஸ்தூர் என்னும் பணியாளர்களை அவர்கள் நமது வீடுகளில் உள்ளே சென்று ஏடிஸ் கொசுவின் லார்வாக்கள் அவர்கள் பிடித்து வைத்துள்ள பாத்திரங்களை பார்க்க /சோதிக்க அனுமதிப்பதே இல்லை என்பது தான் கசப்பான உண்மை .
  • பெரும்பான்மையான வீடுகளில் ஆண் மக்கள் வெளி நாடுகளில் ஊர்களில் பிழைப்பை தேடி சென்றுள்ளனர் .பெண்கள் மட்டும் தனியாக உள்ள வீட்டில் பொதுவாக எந்த சுகாதார ஆய்வாளரும்,சுகாதார துறை ஊழியரும்  பரிசோதிப்பது என்பது மிக மிக கடினம்.
  •  அபேட் என்னும் கொசுவை ஒழிக்கும் மருந்தை நல்ல தண்ணீரில் கலக்க யாரும் பொதுவாக அனுமதிப்பதே இல்லை .எதோ பிச்சை காரர்கள் வந்து பிச்சை கேட்பவர்களை விட கேவலமாக மஸ்தூர்களை நடத்தும் அவலமும் இங்கே தான் நடக்கிறது ..கிரில் கேட்டின் வழியாக அவர்கள் தரும் அபேட் மருந்தை வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே சென்று கீழே தான் பலர் ஊற்றுகிறார்கள் .அந்த மருந்து சாக்கடையில் கலக்க  வேண்டிய மருந்து என்று பலர் நினைத்து இருக்கிறார்கள் .
  • பெரிய பெரிய தெருவிலே இந்த கஷ்டம் என்றால் சிறிய சிறிய சந்து பொந்துக்களில் உள்ள வீடுகளில் எப்படி கொசு ஒழிப்பு எப்படி சாத்தியம்?
  • அடிக்கடி கொசு புகை மருந்தை மட்டும் அடித்தால் மட்டுமே போதுமா ? ..இன்று கொசு புகை Fogging அடிக்க வரவில்லை என்பது மட்டுமே பெரிய குறையாக தெரியும் நமது மக்களுக்கு சேமித்து வைத்துள்ள நல்ல தண்ணீரில் கொசுவின் லார்வா இருக்கிறதா என்பதை பார்க்க தெரிவதில்லை.
  •   நல்ல காற்றோட்டம் வர வழி இல்லாத ஜன்னல் இல்லாத வீடுகளே பொது சுவர் வீடுகளே அதிகம் ..நல்ல காற்று வேண்டுமானால் இங்கே எப்போதும் வெளியில் கிடைக்கலாம் ..வீட்டின் உள்ளே கிடைக்குமா என்பது தான் சந்தேகம். சென்னை ,மும்பை போன்ற நகரங்களின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு  சவால் விடுகிற விலையில் உள்ள இங்குள்ள வீட்டு மனைகள் ..ஒரு சென்ட் நாற்பது இலட்சம் கூட பத்தாது ..இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வீட்டு மனைகள் பொதுவாக நீளம் நாற்பது முதல் அறுபது வரை ,ஆனால் அகலமோ குறைந்தது ஒன்பது அடி முதல் பதினாலு –பதினாறு அடி வரை தான் உள்ளது ..சுற்றிலும் பொது சுவர்..காற்று வரும் ஆனால் வராது ..நன்கு கட்டமைக்கபட்ட விதத்தில் தெருக்களை விட –அப்படி இல்லாத தெருக்களே மிக மிக அதிகம் ..இதில் ஆரோக்கியம் பேணுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து ..இனி மேலாவது நல்ல கற்றோட்டதுடன் வீடுகள் அமைந்தால் நல்லது


  •         சாக்கடை தண்ணீரில் இந்த கொசுக்கள் வளர்வதில்லை என்றாலும் ,இங்கே சாக்கடையில் தான் குப்பைகளை மக்காத கீஸ் பை என்னும் carry  bag இல் கட்டி போடுகிறார்கள் என்பதும் ..வீட்டின் முன்னே ஓடுகிற சாக்கடை பல இடங்களில் திறந்தே கிடக்கிறது ..திறந்துள்ள சாக்கடை வீதிகளின் முக்குகள் அனைத்தும் குப்பை பைகள் ..




மேலே கூறிய காரணங்கள் தவிர்க்கபட்டு மக்கள் சுகாதார பணிகளில் சேர்ந்து ஒத்து உழைத்தால் தான் இதே மாதிரியான டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க இயலும் ..


Post Comment

0 comments:

கருத்துரையிடுக