வெள்ளி, ஜனவரி 29, 2010

சித்த மருத்துவம் part 9


மருத்துவமும் காலமும்
காலம் என்பது தாம் செய்யக் கருதிய செயலுக்கு ஏற்ப அமையும். காலத்தைக் கருத்திற் கொண்டு செய்கின்ற செயல், காலத்தைப் போலச் சிறப்பிற்குரியதாக அமையும். காலத்தைக் கருதிச் செய்கின்ற செயலைப் போலச் சிறந்த செயல் ஒன்றிருப்பதில்லை.
"" அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.''
என்னும் குறள், காலத்தை அறிந்து செய்கின்ற செயலின் சிறப்பை அறிவிக்கும். செய்கின்ற செயலின் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆதாரமாகக் காலம் அமைகிறது.
மருத்துவ நூலில் பல்வேறு காலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனின் சராசரி ஆயுளைக் குறித்தும், மருந்து செய்வதற்கு ஏற்றகாலம் எது என்பதும், மருத்துவன் நோயாளியின் நாடியை அறியத் தேர்வு செய்வதற்குரிய காலமும், நோயின் வன்மையினால் நோயாளியின் இறுதியை அறிவிக்கும் காலமும் காலக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. இவை, ஆயுள், ஆண்டு, பெரும்பொழுது, சிறு பொழுது, கிழமை, நாள், நட்சத்திரம், வாரம், நாழிகை, திதி, கணம் எனப்படும்.
முறையாகப் பிறந்த பிள்ளைக்கு ஆயுள் 100 ஆண்டுகள் ஆகும். அதில் ஒன்று முதல் 10 வயது வரை பாலப்பருவம். 20 வயது வரை வளர்ச்சிப் பருவம். முப்பதாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒளி குறையத் தொடங்கி, 40 வயதுக்குள் அழகு குன்றி, 50–ஆம் வயதில் நிலம், நீர் இவற்றின் தன்மை மிகுந்து நெருப்பின் தன்மையால் நரை உண்டாகி உடல் தளர்ச்சியுறும். 60–ஆம் வயதில் நீர், மண் இவற்றின் தன்மை மிக அதிகரிக்கும். கண்ணின் ஒளி குறையும். நடையில்
தடைகள் காணப்படும். 70–ஆம் வயதில் உடல் ஒடுங்குவ துடன் நீர்ச்சத்து குறைந்து தாதுவில் தீத்தன்மை அதிகரிக்கும். தாதுக்கள் உலர்ந்து அறிவும் குன்றும். 80–ஆம் வயதில் வாய்வு அதிகம் வெளியாவதுடன் மேல் மூச்சு வாங்கும். தொண்ணூ<றாமாண்டில் புலன்கள் ஐந்தும் சீவனோடு பொருந்தும். விந்து மறைந்து போகும். 100 –ஆவது வயதில் நலம் எதுவுமே இல்லையாய் மரணம் உண்டாகும். என்று இயல்பாக மனிதனின் வாழ்க்கையைப் பற்றிக் கூறப்படுகிறது.
மனிதன் கருவாக உருவான போதே வாழ்நாள் இவ்வளவு என்பதும், சாகும் நாள் இன்னது என்பதும், நற்குணம், தாழ்குணம், புகழ் இன்னவை என்பதும் கருவில் பதிப்பிக்கப்படுவதாகும்.
"" விட்டபின், கர்ப்ப வுற்பத்தி வீதியிலே
தொட்டுறுங் காலங்க டோன்றக் கருதிய
கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மை சீர்
பட்டநெறி யீதென் றெண்ணியும் பார்க்கவே''
எனப்படுவதனால், எல்லா நன்மை தீமைகளும் கருவில் பதியப் பெற்றவை என்பதை அறியலாம்.
இன்றைய அறிவியல் வல்லார்கள் கண்டறிந்த ஜீனோம் பற்றிய கருத்துகள் இதனோடு ஒத்திருப்பதைக் காணலாம். அணுவின் உள்ளே எல்லாம் பதியப் பெற்றவை என்பதே ஜீனோம் கண்டறிந்தவர்கள் கூற்றாகும்.
ஒவ்வொருவரின் உடல் அமைப்பு கருவில் இயல்பாக எப்படி அமைந்திருக்கின்றதோ, அப்படியே அவரின் ஆயுட்காலமும் அமைந்திருக்கும் என்பதை அறியும் முறை கூறப்படும்.
மனிதன் விடுகின்ற மூச்சுக் காற்றானது 6 விரல் அளவு வெளியே சென்றால் 80 ஆண்டும், ஏழுவிரல் அளவு வெளியே சென்றால் 62 ஆண்டும், எட்டுவிரல் அளவு வெளியே சென்றால் 50 ஆண்டும், ஒன்பது விரல் அளவு வெளியே சென்றால் 32 ஆண்டும், ஆயுளாக அமையும்.
"" ஏறிய வாறினில் எண்பது சென்றிருந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளியிவ் வகையே''
என்றதனால், வெளிவிடும் சுவாசம் அளவுக்கு அதிகமானால் ஆயுள் குறையும். குறைவாக வெளியே விட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அறியலாம்.
காலமும் மருத்துவ நூலாரும்
காலத்தைக் கணிப்பதில் மருத்துவ நூலார் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கோர் எடுத்துக் காட்டாகப் பின்வரும் செய்தி அமையக் காணலாம். அதாவது, பொழுதைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் வகுத்தனர் முன்னோர். அதனையே ஏற்று மருத்துவ நூலாரும் தங்கள் மருத்துவக் காலங்களைக் கூறாமல், அதிலுள்ள சிறு சிறு குறைகளையும் நீக்க முயன்றிருப்பது தெரிய வருகிறது.
தென்தமிழ் நாடானது, சூரியனுடைய செங்குத்தான கிரணங் களால் வெப்பமும் ஒளியும் பெறுவதான வெப்ப மண்டலம் எனப்
பட்ட, பூமியின் நடுப்பாகத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தால், ஆறு பெரும்பொழுதுகளும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதை அறிவாயாக. இக்கூற்று உண்மை என்பது கார்த்திகை பதினைந்து தேதிக்குப் பின் பனி பெய்வதையும், பங்குனி பதினைந்து தேதிக்கு மேல் சூரியனுடைய வெப்பம் அதிகரித்து வருவதையும் கண்ட பெரியோர்கள் ,மேற்படி ஆறு பெரும்பொழுதுகளையும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட தேதிக்கு 15 நாள் முன்னதாகவே மருத்துவப் பெரும் பொழுதாகக் கொண்டு, அவ்வக் காலத்து ஒழுக்கங்களைத் தவறாமல் ஏற்று வந்தாலே காலத்தின் மாறுபாடுகளால் ஏற்படும் நோய்களைத் தடுத்துக் கொள்ள இயலுமென்பதை அனுபவத்தால் கண்டறிந் துள்ளனர். இவ்வகைக் கணிப்பு தென்கீழ்த் தமிழ் நாட்டுக்கு ஒவ்வும் என்க.
"" ஆதித்தர்க் குச்சமோ டாட்சிக்குட் பட்டதென்
றோதிடும் பூமத்திக் குத்தரத்தே பூதிசார்
தென்றமிழ்நா டுள்ளதால் செப்பாறு போழ்துசற்று
முன்னதாகத் தோன்று முணர்''
என்று பெரும்பொழுதைத் துல்லியமாகக் குறித்துள்ளதால் மருத்துவ நூலின் தோற்றம் தென்தமிழ்நாடு என்பதை விளக்குவதாகத் தெரிகிறது.
காலமும் மருந்தும்
மருந்துகளைச் செய்ய எந்த எந்த மாதங்களில் எந்த எந்த மருந்துகளைச் செய்ய வேண்டுமென்று உரைக்கப் பெற்றுள்ளனவோ, அந்த அந்த மாதங்களில்தான் அந்த அந்த மருந்துகைளைச் செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மாதங்களின் முக்கியத்துவம் விளங்குகிறது.
அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் முடித்திடுமாறு கூறப்படுகிறது.
பங்குனி, சித்திரை  குரு மருந்து; தை, மாசி  செயநீர்;
ஐப்பசி, கார்த்திகை  உருக்கு வகை; ஆடி, ஆவணி  திராவகம்;
வைகாசி ஆனி  சாரணை; புரட்டாசி, மார்கழி  செந்தூரம்;
ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது. கவனமாகப் பார்த்துச் செய்யவும் என்ற கண்டிப்பும் காணப்படுகிறது. 311
காலமும் வெப்பமும்
இதனால், இயற்கையின் வெப்பமும், மருந்திற்குத் தேவைப்படும் வெப்பமும் ஆராயப்பட்டிருப்பது தெரிய வரும். இளவேனில் காலத்தில் செய்ய வேண்டிய குரு மருந்தைக் கூதிர் காலத்தில் செய்ய நேர்ந்தால், நூறு வறட்டிகளினால் இளவேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பத்தை விடவும் குறைவாகக் கூதிர் காலத்தில் கிடைக்கக் கூடும். காரணம், இயற்கையாகவே இளவேனில் காலமும் கூதிர் காலமும் வெப்பத்தால் வேறு வேறானவை. ஒரு மருந்து, வேதியல் முறையில் ஒரு மாற்றத்தைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு வெப்ப நிலையில் அம்மருந்து வைக்கப்பட்டால்தான் நிகழும் என்பதே அறிவியல் உண்மை. அத்தகைய வேதியல் மாற்றம் நிகழாமல் செய்யப்படும் மருந்து நோயைத் தீர்க்கக் கூடியதாக அமையாது. நோயின் தன்மையை மாற்றவும் கூடும். அவ்வாறானால் மருத்துவரின் நற்பெயர் கெட நேரிடும். காலம் கருதினால் அவ்வாறு நிகழாமல் போகலாம்.
காலமும் நாடியும்
எந்த நோயையும் நாடியின் துடிப்பு கொண்டு கண்டறிய முடியும். இந்நாடியைக் கணிக்க காலம் பார்த்தல் வேண்டும். இந்தெந்த மாதங்களில் தான் நாடியைப் பார்க்க வேண்டும் என்பது விதியாகக் கூறப்படுகிறது.
 சித்திரை, வைகாசிவைகறை; கார்த்திகைநண்பகல்;
ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி மாலை;
பங்குனி, ஆவணி, புரட்டாசி இரவு'' 
என்னும் நான்கு சிறுபொழுதுகளில் நாடி பார்க்க வேண்டும்.
இதில் குறிப்பிட்டுள்ள சிறுபொழுதுக்கும் இயற்கையின் வெப்பத்துக்கும் ஏற்ப நாடிகள் இயங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் நண்பகலில் ஏன் நாடி பார்க்கக் கூடாது எனச் சிந்தித்தால் அதன் பொருள் விளங்கும்.
காலமும் மருத்துவனும்
மருந்துகளைச் செய்ய மாதத்தையும் பருவத்தையும் அறிந்து அதன் வழிச் சென்று, அதற்குரிய மருந்துகளைச் செய்து சேகரிக்கப் படுவதுடன், நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்ப்பதும் கூடாதென்பது கூறப்படும்.
"" நாள்களின் பேதம் பாரு நடவடி யின்ன தென்று
கோள்பாரு உச்சம் பாரு குணம்குறி வந்த குற்றம்
ஆள்பாரு நடக்கை பாரு அவரவர் செய்கை பாரு.''
நோயாளியைக் காணுகின்ற நாளின் பேதா பேதங்கள்; கோள்களின் நிலை; அவற்றின் உச்சம்; அதனால் உண்டாகும் விளைவு; நோய்க்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு; நோயாளிக்கும் கோள்களுக்கும் உள்ள நட்பு, பகை என்னும் உறவு; நோயாளிக்கு வந்த நோய்க்கு மருந்து தயாரிக்கும் காலம் என்பன கண்டறியப்பட்ட பின்பே, மருத்துவம் பார்க்க வேண்டும்.
"" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''
"" உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''
என்னும் குறள்களின் பொருள் மேற்கண்டவற்றை உறுதி செய்ய அரணாக அமைவது கருதத்தக்கது.
காலமும் உணவும்
உணவை எந்த முறையில் உண்ண வேண்டும். உணவின் அளவு, உணவுண்ணும் நேரம் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். உண்பது நாழி, உடுப்பவை இரண்டேஎன்று பழந்தமிழ் மக்கள் கருதினர்.
நுதல் வியர்க்கும் படியாக உணவை உண்டனர்என்னும் செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகிறது.
"" விலாப்பக்கம் புடைக்கும் அளவிற்கு உணவுண்டனர்''
என்பவற்றிலிருந்து உணவை எவ்வாறு உண்டனர் என்பது தெரியவரும். ஆனால், மருத்துவ நோலோர் மேற்கண்ட முறை யிலிருந்து மாறுபட்டிருக்கின்றனர்.
"" இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்தஇன் பத்தைக் காட்டும்.''
பசி உண்டான பின்னர் உண்ணும் உணவே உடலுக்கு இன்பத்தைத் தரவல்லதாகும் என்று கண்டனர்.
"" அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.''
முன்னர் உண்ட உணவு செரிப்புண்டானதை அறிந்தும், பின்னர் மிக்க பசி உண்டான பின்பும், உடலுக்கு எந்தவித ஒவ்வாமையையும் உண்டாக்காத உணவை அறிந்தும் உண்க என்றனர். அதுவே, ‘நெடிதுய்க்குமாறு’ என்றதைப் போல, நீண்ட நாள் வாழ வழி வகுக்கும் என்று வாகட மறையோர் வகுத்த முறையாம்.
அதே போல், உணவை எத்தனை பொழுது உண்பது என்பதும் கேள்விக்குரியது. சராசரியாக நாளொன்றிற்கு மூன்று வேளையை விடவும் அதிகமாக உண்ணுபவர் உண்டு. என்ற போதிலும் மூன்று வேளை உணவு என்பதே முறையானது என்பது பொதுவான கருத் தாகும். ஆனாலும், மருத்துவ வல்லார் உரைப்பது வேறாக உள்ளது.
"" உண்பதே ஒருபொழு தாகில் உடலுக்கு உறுதி யாகும்
உண்பதே இருபோ தாகில் உயர்பெலம் எழுதாது எய்தும்
உண்பது மூன்று காலம் உண்டிடில் பிணிஉண் டாகும்
உண்பதும் இரண்டு காலம் உரைத்ததாம் உலகத் தோர்க்கே
உரைத்திடும் காலம் ஆறும் உயர்நிலம் ஐந்தும் ஒக்கும்
நெறியுறு காலம் தப்பா நேர்மையாய்ச் சமைத்த அன்னம்
நெறியுற உண்பார்க்கு இல்லை நீள்நிலம் மீதில் நோயே.''
ஒரு வேளை உணவினால் உடலுக்கு உறுதியும், இருவேளை உண வினால் உடலுக்கு வலுவும் உண்டாகும். மூன்று வேளை உணவு உண்டால் நோயும் உண்டாகும். இது உலகத்தோர்க்கு உரைத்தது. ஆறு காலத் திலும் ஐவகை நிலத்திலும் வாழும் மக்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.
இவ்வாறு காலமாறுபாடு இல்லாமல் குறித்த காலத்தில், முறை யாகச் சமைக்கப் பெற்ற உணவை உண்ணுகின்றவர்களுக்கு நோய் என்பதே வராது என்று வகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
காலமும் கற்பமும்
சாகா நிலையை எய்துவதற்காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் மருத்துவ, ஞான நூல்கள் கற்பங்களைக் கூறியுள்ளன. அக்கற்பங்களை உண்பதற்கு நாள்கள் குறிக்கப்படுகின்றன. கற்பங்களைப் பௌர்ணமி நாளிலும், மூன்றாம் பிறை நாளிலும் உண்ண வேண்டும் என்பர்.
காலமும் யோகமும்
யோக முறைகளைப் பின்பற்றிச் சித்த நிலையைப் பெற
 முயல் பவர்கள், எந்தெந்தக் காலங்களிலிருந்து
 தொடங்க வேண்டும் என்பதற்கு அரிய முறைகளைக் கூறக் காண்கிறோம்.
யோகிகள் தங்கள் செயல் ஆவணி
, மார்கழி, ஐப்பசி, பங்குனி, வைகாசி, 
ஆடி, தை ஆகிய ஏழு 
மாதங்களில் தொடங்கினால் குற்ற மில்லை.
மேஷம், மீனம், கன்னி, அவிட்ட
 நட்சத்திரங்களும்
குரு, மதி, புகர், புந்தி ஆகிய இலக்கினங்களும்
மீனம், வில், துலை, கன்னி 
ஆகிய இராசிகளும்
பஞ்சமி, சஷ்டி, சத்தமி, தசமி, 
திருதிகை, சதுர்த்தி
ஆகிய திதிகளும் குருபூசை, சிவபூசை, தீட்ø
ஆகியவற்றுக்கு நல்ல நாள்களாகும் என்பர்.
காலமும் நோயும்
நோயுற்றது எந்த நாள் என்பதை அறிந்தால்,
 இயல்பாக எந்த நாளில் அந்த நோய் போகும்
 என்பதை 
அறிய விண்மீன்களைக் கொண்டும் 
திங்களைக் கொண்டும் அறிந்துள்ளனர். விண்மீன், திங்கள் 
ஆகியவற்றின் கதிர் இயக்கங்கள் மனித நோயின்
 ஆற்றலைக் குறைக்கவும் கூட்டவும் வல்லவை
 என்பது இதனால் பெறப்படும். இது, நாளோடும், 
கோளோடும் நோய்களுக்கும் மனித
 உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு
 என்ன என்பதை அறிய வழிவகுக்கும் எனலாம்.
அறுவை சிகிச்சைக்குரிய காலம்
அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகின் 
மகத்தான சாதனை எனலாம். இதன் தொடக்கம் 
என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது.
 வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை நம்
 முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரியவரும்.
 அவ்வாறு புண் களையோ 
நோய்ப் பகுதிகளையோ நீக்கவோ, சரிசெய்யவோ 
செய்யப் படுகின்ற அறுவை மருத்துவத்தை
 எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிகளில் செய்யக் கூடாது
 என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், 
பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும்
 மனித உடலில், ‘அமுத நிலைகள் சுழன்று கொண்டிருப்பதாகவும், 
அதன் சுழற்சியின் போது,
 ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். 
அந்தப் பகுதி எது என்பதை அறிந்து,
அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை 
செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, 
அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, 
குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, 
பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ 
நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், 
திதிகளை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால்
 நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது.
 இவ்வாறான அமுத நிலைச் சக்கரம் ஒன்றை 
மதனநூல் உரைத்திடக் காணலாம்.
 அந்தந்த திதிகளில் அந்தந்த நிலைகளில் அமுதம்
 நிற்கு மெனவும், 
அவ்விடத்தைத் தொட்டாலே இச்சை உச்ச
 நிலையை அடையுமெனவும், 
அந்த நிலைக்கு எட்டாமிடம் நஞ்செனவும், அவ்விடத்தைத் தொட்டால்
 இச்சையில் வெறுப்பு ஏற்படுமெனவும் கூறப்படும்.
 (அமுதநிலை இணைப்பு 14).
உயிர்க்கதிரலை
வானவெளியில் வீசப்படும் மின்காந்த நுண்ணலைகள்
 (இணிண்ட்டிஞி ணூச்தூண். ஈணூ. 
ஏ.ஆர். மில்லிகன் என்பவரால் 1925–ல் கண்டுபிடிக்கப்பட்டது.) 
விண்மீன்களின் இடையிலிருந்து
 வருவதாகக் கருதப்படுகிறது.
அதேபோல், பூமியின் நடுவிலுள்ள 
நெருப்புக் குழப்பிலிருந்து வீசப்படும் பூகம்பக் கதிர்
 அலைகள்  பூமியில் நில அதிர்வை 
ஏற்படுத்தி பல அழிவுகளை உண்டாக்கு கின்றன. 
அதே போல் மனித உடம்பினுள் உயிர்க் கதிரலை 
வீசப்படுகிறது. அது உலா வந்து கொண்டிருக்கும் பகுதிகளில்
 (உறுப்பு) காயமோ கத்தியோ பட்டால்
 அக்கதிர்கள் அப்புண்களின் வழியே வெளியேறிவிடும். அதனால், 
உயிர்க்கதிர் உடலிலிருந்து 
வெளி யேறினால் மரணம் ஏற்படுகிறது. இக்கதிருக்கு மருத்துவ
 நூல் வைத்த பெயரே அமுதநிலையாகும்.
இதனைக் கொண்டு பார்த்தால், வானவெளியாகிய அண்டத்திலும்
 பூமியாகிய பிண்டத்திலும்
 என்ன நிகழ்கிறதோ அதுவே, மனித உடம்பிலும்
 நிகழ்கிறது எனக் கண்டனர் போலும். 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக