ஞாயிறு, ஜனவரி 10, 2010

வைத்திய பொது இலக்கணம்




காலமானது உலகத் தோற்றத்திற்குக் காரணமாய பஞ்ச பூதங்கள் முதல் யாவற்றயுந் தோற்றுவிக்கின்றது.  இது வருங்காலம், நிகழ்காலம், சென்றகாலம், எனும் மூன்று வகையாக யுழலுகின்றது.   காலமானது வருடங்களாகவும், அயனங்களாகவும்,ருதுக்களாகவும், மாதங்களாகவும், பட்சங்களாகவும், நாட்களாகவும், பரிணமித்து இருக்கின்றது. காலத்தின் போக்கினால்தான் விருஷங்கள் காய்கனிகளைத் தருகின்றது. தானியங்களைத் தருகின்றது. தானியங்கள் விளைகின்றதது, மழை முதலியவைகளும் ஏற்படுகின்றது.  காலத்தின்கோலத் தினால்தான் பெண்கள் ருதுவாகின்றனர்.  திரிகோணங்கள் ஏற்படுகின்றது, ஜனன மாணதிகளும் உண்டாகின்றது.  சுருங்கக்கூறின் அண்டபிண்டங்களின் ஆட்சியே காலம் எனலாம்.  இந்த காலச்சக்கரத்தில் உழலாதவர் எவருங்கிடையாது.

காரிய ஏதுவாகிய இக்காலத்தை வெல்ல எவராலும் முடியாது.எனினும் அவரவர்கள் தங்கள் காலப்பிராப்திவரையிலாவது சக ஜீவியாய் வாழ நினைக்கலாம்.  சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம்
வரைய வேண்டுமென்பது போல, மனிதன் தன் உடல் நன்நிலையில் உள்ள வரையில்தான் எதையுஞ் சாதிக்கமுடியும்.உடலானது நன்நிலையிலிருக்க இதமான உணவும்,மிதமான இயக்கமுமே முதற்காரணமாயுள தென்றும், அ·தின்றி இவைகளின் வியற்பமே பிணி முதலிய பெருந்துன்பங்களுக் குள்ளாகின்றன என்றும் வைத்திய நூல்களில் பன்முறையும் வலியுறித்திக் கூறப்பட்டுள்ளதையும் காணலாம். பிணி முதலாதிகளினால் பெருந்துன்பங்கள் எதுவும் ஏற்படாமல், காலப்பிராப்தி வரையிலாவது, சுக ஜீவியாய் வாழ வைத்தியநூல்கள் நமக்கு ஒரளவு துணைபுரிவதால் உயிர் நூலாம் வைத்தியநூலின் காலஞானத்தைக் குறித்துக் கூறப்பட்டது.


காலமென்ற அக்கினியானது ஜடராகினியில் சேர்வதனால் உணவு, நீர், நித்திரை, காமம், என்ற நான்கு வித வாஞ்சைகள் உண்டாகின்றது.  இவைகளில் உணவின்மையால் தாது நட்டமும், நீரின்மையால் இரத்தக்குறைவும், காமத்தினால் நேத்திரந்தியக்கெடுதியும், நித்திரையின்மையால் சகல பிணிகளும் தொடர்கின்றன.

சுருதி, யுக்தி, அனுபவம் என்னும் மூவிதங்களினால் சரீரம் ஆன்மா என்றும், மனம் அந்தரான்மா என்றும்,பிராணன் பரமான்மா வென்றும் இவைகளே பஞ்ச தத்துவங்களையும் தாரணை செய்து இருக்கின்ற தென்றும்.தெரியவருகிறது. ஆகையால் ஆன்மாவுக்கும், மனதுக்கும் விகற்பமுண்டாகில், மனிதன் உயிர் வாழ முடியாதென்றும் அவன் காலம் என்றவனால் ஐக்கியப்படுவானென்றும் கூறப்படும்.

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்தும், சோதியாய்யெரிந்து கொண்டிருந்த விளக்கின் வத்தியானது கையால் எப்படி அணைந்து போகி றதோ,அப்படியே யாவற்றிற்கும் ஆதாரமாகிய வாயு, ஆதாரமற்றதாகிற போது, பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இது வைத்தியனுடைய மணிமந்திர ஒளடதாதிகளினால் ஒரளவு சாந்தியாகின்றது.

சாதாரணமாய் மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 முறை சுவாசிக் கின்றான்.இதையே பிராணன் என்றும்,இது விகற்பமின்றி நடைபெற்று வரின்,மனிதன் 100 ஆண்டு வரை,சுகஜீவியாய் வாழலாமென்றும் நம்முடைய
பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.இயற்கையான சுவாசமானது 12 அங்குலம் ஒடி,4 அங்குலம் அழிந்து,8 அங்குலம் தான் நின்ற இடத்தை நோக்கும்.இவ்வாறு சுவாசத்தில் 4 அங்குலம் அழிவு ஏற்படுவதால்தான்,
மனிதனின் ஆயுட்காலம் 100 வயதாக ஏற்பட்டதென்றும்,அ·தின்றி சுவாசத்தில் அழிவு எற்ப்டாமல் இருப்பின் பல்லாண்டுகள் ஜீவித்து இருக்கலாமென்றும் அறியக்கிடக்கின்றது.  அதனால்தான் யோகாப்பியாசிகள் சுவாசத்தைச் சிறிது சிறிதாய் பந்தனப்படுத்தி,நீண்ட ஆயுளையும், திடமான தேகத்தையும் அடைந்து வாழ்கின்றனர்.சுவாசத்தில் ஒரு அங்குலத்தை பந்தனப்படுத்தினால் பல சக்திகள் ஏற்படுமென்றும்,12 அங்குலத்தை பந்தனப்படுத்தியவர் பேரின்ப நிலையை அடைந்து என்றும் சிரஞ்சீவியாய் இருப்பார்களென்றும் அறியக்கிடக்கின்றது.


வலதுபக்கத்து நாசியில் சுவாசிப்பதற்கு சூரியகலை அல்லது பின்கலை என்று பெயர்.இது 12 கலைகளையுடையது. இடதுபக்கத்து நாசி சுவாசிப்பதற்க்கு சந்திர கலை அல்லது இடகலை என்று பெயர்.  இது 16 கலைகளையுடையது.  இவைகள் இரண்டிற்கும் இடையில் இருப்பதே சுழிமுனை எனப்படும்.மேற்கூறப்பட்டுள்ள சரங்களில் முறைப்படி சுவாச அப்பியாயங்களை செய்துவருவதற்கே பிராணயாமம் என்று பெயர். இதனைத்தக்க குரு முகாந்திரமாய்க்கற்றுப் பழகிவருதல் நன்றென்றும், இதனால் மனிதன் நீண்டநாள் சுகானந்தத்தோடு உயிர் வாழ முடியும்.

முக்குற்ற இலக்கணம்

இச் சரீரம் பிருதிவி என்னும் பூதத்தால் உருவாகி, ஆகாயம் என்னும் பூதத்தினிடமாக ஒடுங்கி, அப்பு, தேயு, வாயு என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டு வருகின்றது. மேற்கூறப்பட்ட அப்பு, தேயு, வாயு என்பதே கப, பித்த, வாதமென்ற முக் குற்றங்களெனவும், இவைகளின் இயக்கத்தின் விகற்பமே நோய்க்குக் காரணமெனவுங் கூறப்படும்.

இக் கருத்தினைக் கொண்டே தமிழகத்துத் தனிப்பெரும் புலவராகிய திருவள்ளுவரும்,

" மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளி முதலா வெண்ணிய மூன்று"
எனக் கூறியுள்ளார்.



ஆகவே நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணத்தை அறிதல் மிகவும் அவசியமாகும்.


வாதம்:- இது கடினம், இலேசத்துவம், குளிர்ச்சி, வரட்சி, அசைதல், அணுத்துவம் என்னும் குணங்களை யுடையது. இது தொப்புளுக்குக் கீழ் இடுப்பு தொடை எலும்பு, தோல் முதலியவிடங்களில் பரவி மலம் நீர் விந்து வியர்வை இவைகளைக் கழியச் செய்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கின்றது. இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூரமன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து வகைப்படும்.

பிராணன் மூலாதாரத்திலுதித்து மேல்நோக்கிச் சிரசை இருப்பிடமாகக்கொண்டு சுவாசிக்கக் காரணமாயுளது. அபானன் மூலாதாரத்தினின்று கீழ்நோக்கி குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையே நின்று மல மூத்திராதிகளைக் கழிக்கும். வியானன் இருதயத்தை இருப்பிடமாகக்கொண்டு உடல் முற்றும் வியாபித்து நீட்டல் மடக்கல் ஸ்பரிசம் அன்னசாரத்தை நிரப்பல் முதலிய தொழில்களைப் புரியும். உதானன் மார்பினிடமாக நின்று உதராக்கினியை எழுப்பி அன்னத்தைச் சீரணிக்கச்செய்து நாடிகளில் செலுத்தும். சமானன் நாபிஸ்தானத்தை இருப்பிடமாகக்கொண்டு உணவாதிகளினால் ஏற்பட்ட குற்றங்களை மீறவொட்டாமல் தடுத்து சமப்படுத்தும். நாகன் கலைகளை உணரல், பார்த்தல் முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது. கூர்மன் மனதிடமாக நின்று கொட்டாவி, சிரித்தல், கண்ணிமைத்தல் முதலிய தொழில்களைப் புரியும். கிரிதரன் நாநாசி இவைகளினின்று இருமல், தும்மல் முதலிய தொழில்களை உண்டாக்கும். தேவதத்தன் கோபம், சோம்பல், கொட்டாவி முதலியவற்றை உண்டாக்கும். தனஞ்செயன் வீங்கச் செய்தல் முதலியத் தொழில்களை உண்டாக்கும்.

 

பித்தம்:- இது வெப்பம், குரூரம், பளபளப்பு, சலரூபம், புளிப்பு, விரேசனம் முதலிய குணங்களுடையது. இது உந்திஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு உஷ்ணம், சீரணம், பசி, தாகம், சுவை, பார்வை, காந்தி முதலிய தொழில்களுக்குக் காரணமாக இருக்கின்றது. இது அனலம், இரஞ்சகம், சாதகம், ஆலோசகம், பிராசகம், என ஐந்து வகைப்படும்.
 


அனல பித்தமானது ஆமாசயத்திற்கும் பக்குவாசயத்திற்கும் நடுவில் நின்று, தனது இயற்கைத் தன்மையாகிய உஷ்ணத்தினால் உணவைச் சீரணிக்கச் செய்கின்றது. இரஞ்சக பித்தமானது ஆமாசயத்தில் நின்று இரச தாதுவைப் போஷிக்கும். சாதக பித்தமானது இருதயஸ்தானத்தில் நின்று, அறிவு புத்தி முதலியவற்றிற்குக் காரணமாகி எக்காரியத்தையுஞ் சாதிக்குந் தன்மை வாய்ந்தது. ஆலோசகப் பித்தமானது கண்களில் நின்று பார்வைக்கு யேதுவாயுளது. பிராசக பித்தமானது சருமத்தினிடமாக நின்று அதற்குக் காந்தியை யுண்டாக்கும்.

 

மருத்துவனின் இலக்கணம்

கடவுளால்படைக்கப்பட்டமனிதன் இவ்வுலகின்கண் தர்மம், அதர்மம், காமம் மோஷம், என்ற நான்கு புருஷார்த்தங்களை அடைந்து ஜீவிப்பதற்கு முதற்காரணமாயுளது தேகாரோக்கியமாகும். இதற்கு விரோதியாக உள்ளதுதான் வியாதிகள் எனப்படும்.


கூர்மையான அறிவுடையவனும்,தைரியவானும்,ஆசாரமுள்ள வனும் தேகம்,பல்,கண்,உதடு,செவி இவைகள் விகாரமற்றவனும்,சந்தேகமற்வனும், ஞாபகசக்தியுடையவனும், சகலவித்தைகளில்தேர்ந்தவனும், உயிர்களிடத்து அன்புள்ளவனும், நல்லொழுக்கமுள்ளவனும், எந்நோயையும் அசாத்திமென கைவிடாமல், உயிர் உடலைவிட்ட ுநீங்கும்வரையில் தீவிரபுத்தியுடனும் மனோதிடத்துடனும், சிகிச்சை செய்பவனும்,ஆகிய இத்தியாதி குணங்களு
டையவனே சிறந்த மருத்துவனாவான்.


மருத்துவன் அறிந்துகொள்ளவேண்டியவைகள்:

சரநூல், குற்றமற்றவிகார வித்தை, முதலியவைகளைக் கசடறக்கற்றவர்களே சிறந்த வைத்தியனாக கருதப்ப்டும்


சரம் என்பது சூரியகலை சந்திரகலை ,சுழிமுனை முதலிய சுவாசக்குறிப்புகளைக் கூறும் சாத்திரமாம்.  இதனால் நோயின் சாத்யா சாத்தியங்களை ஒருவாறு கணிக்கமுடியும்.விகார வித்தை என்பது இரச வாதத்தைப்பற்றிக்கூறப்படுஞ்சாத்திரமாம்.அதாவது செம்பு, ஈயம் முதலிய மட்டலோகங்களைத்,தங்கம்,வெள்ளி முதலிய உயர்ந்த லோகங்க ளைச்செய்யும் வித்தை,இது பெரும்பாலும் முப்பு முதலிய குருமருந்துகளைக் கொண்டு செய்யப்படும்.இத்தகைய விகார வித்தையை யறிந்தவனே வாதி யென்றும்.அவன் ரசகந்தி முதலிய சரக்குகளைக் கட்டி நீற்றி மருந்தாக முடித்து பிணிகட்கு வழங்க எத்தகைய பிணிகளும் விரைவில் குணப்படும் என்று அனுபவத்தில் கண்டுள்ளது.மற்றும் பதினென் சித்தர்களில் முதன்மை யானவராகிய அகத்தியனார் எழுதியநூல்களையும்,மந்திரங்களையும்,கற்றறி தல் வேண்டும். கர்மகாண்டம் என்பது கர்மாதிகளினால் நோய்கள் சம்பவிக்கும் விதத்தையும்,அதற்குச் சாந்தி செய்யும் வகை முதலியவைகளையும் கூறப்படுவனவாம்.

  இவற்றுள் ஒரு சிலவற்றைமற்றும் கற்றுவிட்டு வைத்தியம் செய்வது ஆபத்துக்கிடமாகும். சிகிச்ச ைமுறைகளையும், நல்லமருந்து முறைகளையும்,மட்டும் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது உடற்கூறு தத்துவங்கள் அஷ்டவித பரிஷை முதலியச்வற்றையும், அவற்றின் வாயிலாக  நோய்களைக்
கணிக்கவும்பயில வேண்டும். ம்ற்றும் மருந்துகளின சக்தி, குணம், நிகண்டு, முறிவு,செயல்பாக நூணுக்கங்களை முதலியவற்றை அறிந்துருப்பதுடன், கூடுமான வரையில் தானே மருந்துகளைச ்செய்யும் திறமையும் பெற்றிருத்தல ்பெரிதும் நன்மயை பயக்கும்.


நோயாளியின் இலக்கணம்

நோயாளியானவன் உண்மையை பேசுபவனாகவும்,வைத்தியரைக்குருவாக யெண்ணி,அவர்மீது அவர்கொடுக்கும்,மருந்தின் மீது மதிப்பும்நம்பிக்கையும் கொண்டு அதை அவர் சொன்னபடி அருந்திய பத்தியத்தைக்காக்கக்கூடிய வனாகவும்,நல்லொழுக்கமுடையவனாகவும் இருத்தல் வேண்டும்.இன்றேல்
பிணி தீராது என்பதாம்.
 


நோயில் சாத்தியக்குறிப்புகள்: உடல்லேசாகயிருத்தல், முகம்விகாரமற்றிருத்தல்,கைகால்கள், நீட்டமடக்க
இயலுதல்,நா சுத்தமாயிருதல், நாசியின்வழியாக சுவாசித்தல், கண்டத்தில் சுபமின்மை, பஞ்சேத்திரியங்களும், தன்சுய உணர்வுடன் தொழில் புரிதல் எனும் குணங்களுடைய நோயாளி எல்லா விதத்திலும் எளிதில் குணமடைந்து
உயிர் வாழ்வான்.


நோயில் அசாத்தியக்குறிப்புகள்:

உடல் கணத்தல், முகம் முகம் விகாரமற்றிருத்தல்,வாயின் வழியாகசுவாசித்தல், நித்திரையின்மை, பஞ்சேத்திரங்களின் தொழில் கெடல்,உணர்ச்சியற்றுருத்தல், முதலிய குணங்கள் இருப்பின் அந்நோயாளியின் பிணி தீர்வது மிக கஷ்ட சாத்தியமாம்.

மரணக்குறிப்புகள்:

வாதமானதுபித்தஸ்தானத்திலும், பித்தமானது, கபஸ்த்தானத்திலும், கபமானது கண்டஸ்த்திலும் இருக்குமாகில் மரணஞ் சம்பவிக்கும்.மேலும் இரவில்அதி தாகமும்,பகலில் சீதளமும்,கண்டத்தில் கோழைகட்டுவதும், மிகுபேதியும், கஷ்ட சுவாசத்துடன் இருமல்,சூலை,விக்கல் முதலியனவும் இருப்பின் நோயாளி உயிர் வாழ்வது கடினம்.  மார்பு கை கால் முதலியன சீதளமாயும்,சிரசுமட்டும் மிக உஷ்ண மாயிருத்தல், தேகம், பலவிதசாயலாயும், மேல் மூச்சு அல்லது கஷ்டசுவாசத்து டன் வாந்தி,விக்கல் முதலியவைகளும்,தேகத்தில் தூர்நாற்றமும் இருத்தல், தும்மலுடன் மல மூத்திரம் இந்திரியம் முதலியன நளுகல்,நா உதடு இவைகள் கறுப்பு நிறமாதல், எப்போதும் இடது நாசியிலேயே சுவாசம் விடுதல், பார்வை குன்றல்,காதில் ஒரு விதஒலி எப்போதும் இருத்தல்,கண்டபடிபிதற்றுதல் முதலிய குணங்களும்,மரணக்குறிகளென்றறியயும்.மற்றும் சிவன் ஏம தூதர்கள், கந்தர்வர், சர்பகீடங்கள் முதலியவற்றைக் கனவில் பார்த்தல்,பல்லக்கு,படகு,முதலியவற்றில் செல்லுதல்,சந்தனம்,புஷ்பம்,மாமிசம்,முதலியவற்றைப் பெருதல்,இன்னும் இது போன்ற பயங்கரக்கனவுகள் முதலியவைகளைக் கண்டல் முதலியனவும் மரணக்குறிகளெனப்படும்.


சூரியோதய சமயத்தில் ஆந்தை அல்லதுகாகம் கூக்குரலிட்டுத்தன் எதிரில் வந்து தலையின்மீது குத்தினால் சந்தேகமின்றி அவன் அன்றைய மாலைக்குள் மரணமடைவான்.








கபம்:- இது சீதளம், கனத்துவம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, ஸ்திரம் முதலிய குணங்களையுடையது. இது மார்பு ஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு, மார்பு சிரசு நா கண்டம் ஆமம் கீல்கள், உரோமம் இரசதாது மேதோதாது முதலியவற்றில் சஞ்சரித்து, அசையாமை, மழுமழுப்பு, கீல்களுக்கு உறுதி முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது. இது அவலம்பகம், கிலேதகம், போதகம், தருப்பகம், சந்திகம் என ஐந்து வகைப்படும்.

அவலம்பகமானது இருதயஸ்தானத்தினிடமாக நின்று மற்ற நான்கு வகை கபங்களுக்கும் ஆகாரமாயிருக்கும். கிலேதகமானது ஆமாசயத்தினிடமாக நின்று அன்னபானாதிகளை மிருதுவாக்குந் தொழிலைப் புரியும். போதகமானது, நாவில்நின்று சுவைகளை அறியச் செய்யும். தருப்பகமானது, சிரசில் நின்று கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். சந்திகமானது, கீல்களின் இயக்கத்திற்குக் காரணமாகி நிற்கும்.

வாதத்திற்கு பாதம் முதல் நாபி வரையில் இடமென்றும், பித்தத்திற்கு நாபி முதல் கண்டம் வரையில் இடமென்றும், சிலேத்துமத்திற்கு கண்டம் முதல் சிரசு வரையில் இடமென்றும் கூறப்படும். மற்றும் மலத்தைப் பற்றியது வாதமென்றும், மூத்திரத்தைப்பற்றியது பித்தமென்றும், விந்துவைப் பற்றியது கபமென்றும், வாதத்திற்கு நிறம் கருப்பென்றும், பித்தத்திற்கு நிறம் மஞ்சளென்றும், கபத்திற்கு நிறம் வெண்மையென்றும் கூறப்படும்.


நோய்களில் காணுங் குறி குணங்களைக்கொண்டு அந்நோயில் விகற்பமுற்ற தோஷங்களை எளிதில் கண்டறிய மேற்கூறப்பட்ட முக்குற்ற இலக்கணம் பெரிதும் உதவிபுரியு மென்றுணர்க.

Post Comment

4 comments:

Unknown சொன்னது…

மிக அருமையான பயனுள்ள பதிவுகள்.பழங்கால மருத்துவ முறைகளை முழுவதுமாக அறிந்தவர்கள் மிகவும் குறைவு.அதிலும் பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதை வெளிப்படையாக தெரிவிப்பவர்கள் யாருமில்லை.மருத்துவத்தை நன்கு கற்றறிந்தவர் என்ற முறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் பெரும் முயற்சி எடுத்து விவரங்களை வெளியிட்டுள்ளீர்கள்.நன்றி.

Siva சொன்னது…

விநாச காலே விபரீத புத்தி - சுவாசத்தின் கால அளவு மாறினால் கருத்திலும் பண்பாட்டிலும் விபரீதம் ஏற்படும் என்ற ஒரு பொருளை தங்கள் பதிவு ஏற்படுத்தியுள்ளது.
//இயற்கையான சுவாசமானது 12 அங்குலம் ஒடி,4 அங்குலம் அழிந்து,8 அங்குலம் தான் நின்ற இடத்தை நோக்கும்// என்ற அளவுகளின் பொருளை தெளிவு படுத்தினால் பயனுள்ளதாய் அமையும்.

Sivakumar சொன்னது…

'விநாச காலே விபரீத புத்தி' - சுவாசத்தின் கால அளவு மாறினால் ஆரோக்கியம், வாழ்வு (புத்தி, பழக்கம்) விபரீதம் ஏற்படும் என்ற ஒரு பொருளை தங்கள் பதிவு ஏற்படுத்தியுள்ளது.
//இயற்கையான சுவாசமானது 12 அங்குலம் ஒடி,4 அங்குலம் அழிந்து,8 அங்குலம் தான் நின்ற இடத்தை நோக்கும்// என்ற அளவுகளின் பொருளை தெளிவு படுத்தினால் பயனுள்ளதாய் அமையும்.

curesure Mohamad சொன்னது…

நண்பர் சிவா ...

வாசி ஓட்டம் ..உயிரின் கலை ஓட்டம் ,வர்ம ஆற்றல் ஓட்டம்..சர ஓட்டம் ..ஆறு சக்ரத்தின் சுழற்சி ,சுழி முனையின் இருப்பிடம் ..எல்லாம் தெரிந்தால் உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கலாம்...

அளவின் பொருள் ...வினாடிகளில் நிச்சயமாக இல்லை ..இது ஒரு சூத்திர ,சூக்ஷ்ம கணக்கு ...

தங்களின் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது ...

கருத்துரையிடுக